சக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோரை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
வெல்லாவெளி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், தனது வீட்டிலிருந்தே பணிக்கு வந்து செல்வதற்காக மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகரின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
இதற்கான பரிந்துரைகளைச் செய்து தருவதாகக் கூறி, அவரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் கைபேசி உள்ளிட்ட பொருட்களையும், 72,000 ரூபாய் பணத்தையும் சந்தேக நபர்கள் கையூட்டலாக கோரிப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (5) இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
காலை 10.50 அளவில் நுவரெலியா உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) அலுவலகத்தினுள் வைத்து, அங்கிருந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் கைது செய்யப்பட்டார்.








