ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இருந்துவந்த நீண்டகால சட்டச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி முகமது ரேசா ஆரிஃப் கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானிய சட்டத்தில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று நேரடியாகத் தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும், நடைமுறையில் பொலிஸார் பெண்களுக்கு உரிமம் வழங்க மறுத்து வந்தனர்.
ஜனவரி இறுதியில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய தீர்மானம், பெண்களுக்குப் பயிற்சியளிக்கவும் பரீட்சைகளை நடத்தி உரிமம் வழங்கவும் போக்குவரத்து பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஆடைக்கட்டுப்பாட்டு விதிகளுக்காகக் கைதுசெய்யப்பட்ட மஹா அமினி காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெண்கள் தமக்கான சுதந்திரம் கோரி பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கடந்த சில மாதங்களில் ஈரானிய வீதிகளில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கணிசமாக அதிகரித்திருந்தது. தற்போது அரசாங்கம் அதனை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. உரிமம் வழங்கப்பட்டாலும், பெண்கள் பொதுவெளியில் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது இஸ்லாமிய ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெண் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் பயிற்சிகளை வழங்கவும் மின்சார மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் புதிய திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.








