யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு மற்றும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் இணைந்து அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

அகழ்வுப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் இந்த நடவடிக்கைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, செம்மணி புதைக்குழி அகழ்வுப் பணிகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் மேற்கொண்ட விஜயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு விசேட அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே இடம்பெறும் என்றும், நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே செம்மணி புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.








