கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் தனது எழுபத்தேழாவது வயதில் இன்று (25) காலை நிந்தவூர் இல்லத்தில் காலமானார்.
ஊடகத்துறையில் சுமார் அறுபது ஆண்டு காலமாக நடுநிலை தவறாமல் பணியாற்றிய அன்னார் வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப்பணியை தொடங்கி பின்னர் தினபதி, சிந்தாமணி, தமிழன் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் சில முன்னணி இலத்திரனியல் ஊடகங்களிலும் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றியவர்.
அதி சிறந்த ஊடகவியலாளரான இவர் தனது இறுதி மூச்சுவரை சகல இன மக்களினதும் நன்மதிப்புக்கும் பாத்திரமான நடுநிலை ஊடகவியலாளராக பணியாற்றியவர்.
அன்னார் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த போதுதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தால் உருவானது வரலாறாகும்.
மேலும் யாழ்ப்பாணத்தில் மானிடத்தின் தமிழ் கூடல் நிகழ்வு இடம்பெற்ற வேளையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிவித்தலுக்கமைய இந் நிகழ்வின் இறுதிநாளன்று ஐந்து மரக்கன்றுகளில் ஒன்றை சலீம் நட்டமை இவருக்கான உயர் கௌரவமாகும்.








