திருகோணமலை தட்சண கயிலாயம் என அழைக்கப்படும் திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உபயமாக நான்காம் நாள் திருவிழா இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களை அழைத்து திருவிழா திறம்பட நடாத்தப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாசன் மற்றும் தனவந்தர்கள், பேரவை பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த உற்சவத்தில், விசேட அபிஷேக ஆராதனைகளும், சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவும் இடம்பெற்றதுடன் பக்தர்களின் “அரோகரா” கோஷங்களுக்கு மத்தியில், திருக்கோணஸ்வரப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட உற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு நாவற்குடா இசை நடனக் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களின் யோகா நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அதிதிகளால் நிகழ்வுகள் வழங்கியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களுக்குமிடையிலான ஆன்மீக மற்றும் கலாசார பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் உற்சவம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















