மலர்ந்திருக்கும் பராபவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு- பராபவ வருடப்பிறப்பு இன்று காலை 8 மணி 40 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 9 மணி 32 நிமிடத்துக்கு பிறக்கின்றது.
தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று (14) காலை வழிபாடுகள் நடைபெற்றன.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.







ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஆலய தரிசனம் செய்தவர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.








