நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசுக் கப்பலில் பணியாற்றிய இரு இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு “ஹன்டா” வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“எம்.வி. ஹோண்டியஸ்” எனப்படும் நெதர்லாந்து சொகுசுக் கப்பல், கடந்த மாதம் முதலாம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
இந்தக் கப்பலில் 150 பயணிகளும், மாலுமிகள் உட்பட 72 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அண்டார்டிகா மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடற்பகுதிகளிலுள்ள தீவுகளுக்கான சுற்றுலா பயணத்தை மேற்கொண்டிருந்த இந்தக் கப்பலில், பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே மூன்று பயணிகள் “ஹன்டா” வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் தற்போது நெதர்லாந்தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொற்று பாதிப்பு இல்லாத பயணிகள் மட்டும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எலிகள் மூலம் மனிதர்களுக்கு “ஹன்டா” வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக எலிகளின் கழிவுகள் காணப்படும் இடங்களை சுத்தம் செய்யும் போது அல்லது அவற்றின் நுண்துகள்கள் காற்றில் கலந்து சுவாசிக்கப்படும் போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸுக்கு இதுவரை குறிப்பிட்ட மருந்து கண்டறியப்படவில்லை என்றும், இருப்பினும் இது கொரோனா தொற்று போல வேகமாக மனிதர்களிடையே பரவும் தன்மை கொண்டதாக இல்லை என்றும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








