அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), தனது அடுத்தகட்ட ஆர்டெமிஸ் III (Artemis III) திட்டத்திற்காக மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு இத்தாலிய விண்வெளி வீரரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விண்வெளிப் பயணம் சந்திரனில் தரையிறங்கும் திட்டமாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் மனிதர்களை சந்திரனின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லும் முக்கிய முயற்சிகளுக்கான சோதனைப் பயணமாகக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த ஆய்வுப் பயணத்தில், பூமியின் சுற்றுப்பாதையில் இரண்டு விண்கலங்களை ஒன்றிணைக்கும் (Docking) முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்ஷிப்’ (Starship) மற்றும் புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ‘புளூ மூன்’ (Blue Moon) ஆகிய சந்திரனில் தரையிறங்கும் விண்கலங்கள் முதல்முறையாக விண்வெளியில் சோதனை செய்யப்பட உள்ளன.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில், நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் இந்தப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரே டக்ளஸ், பிராங்க் ரூபியோ, ரேண்டி ப்ரெஸ்னிக் ஆகியோருடன், ஐரோப்பிய விண்வெளி முகமையைச் சேர்ந்த இத்தாலிய விண்வெளி வீரர் லூகா பார்மிட்டானோவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
58 வயதான ரேண்டி ப்ரெஸ்னிக் இந்த விண்வெளிப் பயணத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பரிசோதனை விமானியான அவர், ஏற்கனவே மூன்று விண்வெளிப் பயணங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியை நாசா முன்னெடுத்து வருகிறது.








