இலங்கையில், கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (14) நடைபெற்ற 5,000 நடனக் கலைஞர்களின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி குறித்து தற்போது புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இந்த நிகழ்வு இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியாஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது., இதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னரே இணையதளங்களில் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக, அனுமதிக்கட்டணமாக ரூ. 4,500 மற்றும் இந்தியாவிலிலிருந்து வரவழைக்கப்பட்ட சீருடைக்காக மேலும் ரூ. 3,500 வீதம் தலா ரூ. 8,000 வசூல் செய்யப்பட்டதாகக் பங்கேற்பாளர்கள் தகவல் தெரிவித்ததுடன், சிலர் சீருடைகளை தங்கள் சொந்தமாக தயாரித்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், சமூகவலைதளங்களில் 10,000 முதல் 15,000 வரை வசூலிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுடன் இந்த வசூல் குறித்து கடும் கண்டனங்கள் எழுப்பப்படுகின்றன.
வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களிலும் வெறுமனே ‘கின்னஸ் உலகச் சாதனை’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இருந்தும் அதுகுறித்த உத்தியோகபூர்வ சின்னங்கள் ஏதும் அந்த சான்றிதழில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு மூலம் சில குழுக்கள் மட்டுமே பயனடைந்துள்ளதாகவும், மாணவர்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேசமயம் 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை சில நபர்களுக்கு செலவானதன் பின்னணியில் குறித்த மாணவர்களை பயிற்றுவித்து அழைத்து சென்ற ஆசிரியர்கள் பிரயாண செலவுகளுக்காக பெற்றுக்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இருந்தும் ஒரு உலக சாதனையை நிகழ்த்த விரும்பும் அல்லது முயற்சிக்கும் நபர்கள் உதவி செய்ய விரும்பும் நபர்களிடமிருந்து நிதிகளை திரட்டிவிட்டு குறித்த சாதனை முயற்சியை மேற்கொள்ளாமல், 5000 பேரிடமிருந்தும் 8000 வீதம் 40,000,000 வசூல் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பதுடன், ஏற்பாட்டு செலவுகளை தாண்டிய மிகுதிப்பணத்தில் மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் கூட வழங்காது விட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இந்த குழப்பங்களுக்கான பதிலை ஏற்பாட்டு குழுவினரிடம் இருந்து பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.








