மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகள் இன்று (7) பொது சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக, பிஸ்கட்டை உற்பத்தி செய்தவர், விநியோகம் செய்தவர் மற்றும் விற்பனை செய்த வர்த்தகர் ஆகியோருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உற்பத்தியாளருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்ததுடன், ரூ.46,000 அபராதமும் விதித்துள்ளது.
மேலும், குறித்த தொகுதி இலக்கத்தைக் கொண்ட அனைத்து பிஸ்கட் பொதிகளையும் விநியோகம் செய்யப்பட்ட கடைகளிலிருந்து உடனடியாக மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த. கஜனன் தெரிவித்துள்ளார்.








