பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் அ. தர்சினி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, பிள்ளையான் நிகழ்நிலை (வீடியோ) ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவரது சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவர், மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்லடி காணித் தகராறு தொடர்பான வழக்கிலும் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையின்போது, தனது பெற்றோரைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு பிள்ளையான் சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவருக்கான உணவு சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்படும் போது எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பில், சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், பாதுகாப்பு மற்றும் நீண்ட தூரப் பயண சிரமங்களை கருத்தில் கொண்டு, பிள்ளையானை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவரது சட்டத்தரணிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். எனினும், வெலிக்கடை சிறைச்சாலையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கேயே தொடர்ந்து தடுத்து வைப்பது பொருத்தமானது என்றும் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.








