மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்துச் சோதனை நடத்தச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஏழு பேர் கொண்ட பொலிஸ் குழு நேற்று (6) மாலை சுமார் 7.00 மணியளவில் 35ஆம் கொலனி பகுதியில் இயங்கியதாகக் கூறப்படும் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்துள்ளது.
இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களின் உறவினர்களான பெண்கள் உட்பட சுமார் 25 பேர் கொண்ட குழுவினர், பொல்லுகளால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து மேலதிக பொலிஸ் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








