நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற பதற்றநிலையின் போது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இன்று (07) விளக்கமளித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், சிறைக்கைதிகள் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவு வரை முன்னேறியிருந்ததாக தெரிவித்தார்.
மரக்கதவும் உடைக்கப்பட்டு கைதிகள் வெளியேறியிருந்தால் நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்றும், சிறைச்சாலை வளாகத்தில் பாரிய சேதம் ஏற்படும் அபாயம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வந்த சில கைதிகள் அங்கிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும், அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பையும் கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது கைதிகளுக்கிடையிலான மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளே சென்ற சிறை அதிகாரிகளும் அங்கு சிக்கிக்கொண்டதாகக் கூறிய ஆணையாளர் நாயகம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அவசர சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக மரக்கதவு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








