அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற “சிசு சரிய” பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்த நிலையில், இரு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த கர்ப்பிணிப் பெண் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவரும் காயமடைந்த பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்ததாகவும், பின்னர் மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








