மத்திய கிழக்கில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவிக்கையில், இன்று (15) காலை இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறினார்.
நேற்று (14) மாலை 5.10 மணிக்கு யூ.எல்.-229 (UL-229) விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், மாலை 6.36 மணிக்கு யூ.எல்.-253 (UL-253) விமானம் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் புறப்பட்டிருந்தன.
A321neo ரகத்தைச் சேர்ந்த இந்த விமானங்கள் மத்திய கிழக்கு வலயத்தை அண்மித்தபோது, பாதுகாப்பு நிலைமை காரணமாக குவைத் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டு விமானங்களும் அப்பகுதிக்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டு பறந்த பின்னர், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக பல சர்வதேச விமானங்களும் தங்களது பயணங்களில் தாமதம் அல்லது பாதை மாற்றங்களை மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








