கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடர்ந்த கானகப் பாதைகள் வழியாக பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் முதல் குழுவினர் இன்று (15) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்தனர்.
கடந்த 10ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ் ஓடை ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் பாதயாத்திரைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.
முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட பலர், அடர்ந்த காடுகள், கரடுமுரடான மலைப் பாதைகள், சேறு, முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகள் மற்றும் கிரவல் வீதிகளைக் கடந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.
பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி கானகப் பாதையிலும் வழிபாடுகளை மேற்கொண்ட பக்தர்கள், கதிர்காமம் வந்தடைந்த பின்னர் ஆலயத்தில் விசேட கூட்டு வழிபாடுகளில் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டனர்.
இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா பெரஹரா இன்று இரவு நடைபெறவுள்ளது.
15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவின் நிறைவு நிகழ்வாக, எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான கதிர்காம ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.


















