தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்காக அனுதாபத்தைத் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
“மகன் திருடும் போதே தந்தை தடுத்திருக்க வேண்டும். திருட விட்டுவிட்டு, கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனும் இல்லை” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது என வலியுறுத்திய அவர், தாய், தந்தை, சகோதரர் என்ற எந்த உறவுமுறையும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து எவருக்கும் விலக்கு அளிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்த எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படாது எனவும், பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்ற நிலைப்பாடு நாட்டில் உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் ஆதாரங்களை நிரூபித்த பின்னரே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.








