வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கும், நாய்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், நாய்களுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதும், உள்ளூராட்சி மன்றத்தில் அவற்றைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்படவுள்ளது.
ஆறு வாரங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய்களை வளர்ப்பவர்கள், அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி ஆண்டுதோறும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுவோருக்கு பதிவுக் கட்டணத்துடன் மேலதிகமாக 2,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது நிர்வாக எல்லைக்குள் உள்ள வீதி நாய்களுக்கு கருத்தடை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தக நோக்கத்திற்காக நாய்க்குட்டிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் நாய் இனப்பெருக்க நிலையங்களை நடத்துவோர் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும் புதிய சட்டமூலம் முன்மொழிகிறது.








