பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் நிலவும் அபாயம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) காலை 10.00 மணிக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் அபாயம் நிலவுகிறது.
இதனையடுத்து, மறு அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள், படகு இயக்குநர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அதிகாரிகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இப்பகுதிகளிலும் கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீனவ மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.








