இலங்கையில் சிறுவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த புதிய சட்ட வரைபின்படி, பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களைப் பணிகளில் அமர்த்தி, அது தொடர்பான வழக்கு விசாரணைகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபா அபராதத்துடன் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள பத்தாயிரம் ரூபா அபராதம் சிறுவர் உழைப்புச் சுரண்டலைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என தொழிலாளர் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உடன்படிக்கைகளுக்கு இணங்கவும், சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து பணியிடங்களில் அவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்காகவுமே இந்த புதிய சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.








