திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (18) அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்ட காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பெண் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், சமூக ஊடகங்கள் ஊடாகவும் தனக்கு நீதி கோரியிருந்தார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பணியகத்திற்கு சென்றிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.








