யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலாலி வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பரிசோதனையின்போது, காலாவதியான சாக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வர்த்தக நிலையத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, குறித்த வர்த்தக நிலையம் இதற்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தமை தொடர்பான முற்குற்றம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன், 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு அறிவிக்க உத்தரவிட்டார்.
மேலும், தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.








