கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இத்தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அம்முறைப்பாட்டிற்கு அமைவாகப் புதன்கிழமை (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம் அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்








