மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் காணியை முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து அவரது பிணைத்தொகையைப் பறிமுதல் செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான பஸில் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் முன்னிலையாகாததற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காமல் தொடர்ந்து மன்றில் ஆஜராகத் தவறி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவருக்காக பிணையில் கையொப்பமிட்ட மூன்று பிணையாளர்களுக்கும் அபராதம் விதிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னதாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணையை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








