யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பிரதிநிதிகள் நேற்று (19) அங்கு சென்றிருந்த போதிலும், அரசாங்கத்திடமிருந்து உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் புதைகுழிப் பகுதிக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 56ஆவது மற்றும் இறுதி நாளான நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
மதிய உணவு இடைவேளையின்போது கனேடியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள் செல்ல வேண்டுமாயின், உரிய அரச அனுமதியைப் பெற்று பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற வேண்டிய நடைமுறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கனேடியத் தூதரகம் உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான அனுமதியை கோரியிருந்ததாகவும், அதற்கான அரச அனுமதி கிடைக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சித்துப்பாத்தி இந்து மயானத்தின் வாயில் வரை சென்ற கனேடியத் தூதரகப் பிரதிநிதிகள், புதைகுழிப் பகுதிக்குள் செல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகள் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








