முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தாம் ஹரிஜன் அலெக்சாண்டர் என்ற பெயருக்கு சட்டபூர்வமாக பெயர் மாற்றியுள்ளதாக அரசாங்க தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்த கருத்து தமது கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மகேந்திரன், அந்தக் குற்றச்சாட்டு “முற்றிலும் பொய்யானது” என தெரிவித்துள்ளார். இதனைத் தெளிவுபடுத்தும் வகையில், இன்று ஊடக நிறுவனமொன்றுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது மறுப்பை வெளியிடுமாறும் அவர் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் லக்ஸ்மன் அர்ஜுன மகேந்திரன் என்ற பெயரில் கையொப்பமிட்டுள்ளதுடன், சிங்கப்பூர் முகவரியொன்றையும் குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரன் தனது பெயரை ஹரிஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால முன்னதாக தெரிவித்திருந்தார். குறித்த தகவல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (CID) கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், சிங்கப்பூரிலிருந்து மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கு மத்தியில், மாற்று சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.







