ஈரானின் லாரக் தீவில் அமைந்திருந்த இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (30) தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும்.
ஹார்முஸ் நீரிணைக்கு அருகில், பண்டார் அப்பாஸ் துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள லாரக் தீவு, வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கக்கூடிய முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளுடன் கூடிய ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையினர் தயாராகி வருவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்கத் தாக்குதலில் தமது படையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன் காயமடைந்ததாக ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், ஜோர்தான் வான்பரப்புக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச கடற்பரப்பில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும், புதிய கண்ணிவெடிகளை அமைக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் அழிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
எனினும், ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையில் இருப்பதாக ட்ரம்ப் கூறுவதை ஈரானின் புரட்சிகரப் படைகளின் கடற்படை மறுத்துள்ளது. ஈரானின் அனுமதியின்றி கப்பல்கள் அப்பகுதி வழியாகச் செல்ல முடியாது எனவும் அது தெரிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுவதால், அப்பகுதியில் அதிகரித்து வரும் இராணுவப் பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.







