மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி வேம்பு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கான விடுவித்தல் அனுமதிப் பத்திரங்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மாவடி வேம்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நேற்று (27) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொது மயானம், சிறுவர் பூங்கா, கலாச்சார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க வளாகம் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த அதிகாரசபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாவடி வேம்பு கிராமத்தில் பொது மயானம் இல்லாத காரணத்தால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக அருகிலுள்ள கிராமங்களின் மயானங்களைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் பல்வேறு நடைமுறை சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, பொதுமக்கள் நிகழ்வுகளை நடத்துவதற்கான கலாச்சார மண்டபம், சிறுவர் பூங்கா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க வளாகம் ஆகியவற்றுக்கான காணி ஆவணங்கள் முறையாக இல்லாத நிலையும் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பிரதேச உறுப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் காணி சீர்திருத்த அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருடன் கலந்துரையாடி, குறித்த காணிகளுக்கான விடுவித்தல் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த ஆவணங்களின் பிரதிகள் மக்கள் சந்திப்பின்போது பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
மேலும், குறித்த காணிகளை துப்புரவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையின் அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.
இதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.










