மட்டக்களப்பு – கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி–வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைக்கப்பட்ட பிரதான தரைப்பாலம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், நீர்ப்பாசன மற்றும் காணிகள் பிரதி அமைச்சர் அரவிந்த விதாரண கலந்துகொண்டு தரைப்பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
வெள்ள காலங்களில் குறித்த பகுதியில் நீரின் ஓட்டம் அதிகரிப்பதால், வகுலாவலை பிரதான வீதியைப் பயன்படுத்தும் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் முறையான பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு பொதுமக்களால் நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னெடுப்பின் கீழ் குறித்த தரைப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு தற்போது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய தரைப்பாலம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர், பாலச்சேனை கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட விவசாயக் கண்டங்களின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.













