ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து அலட்டிக்கொள்ளப் போவதில்லை என கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரம், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவு தின நிகழ்வு மற்றும் பேராளர் மாநாடு உள்ளிட்ட விடயங்களே கலந்துரையாடப்பட்டதாகவும், தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
காழ்ப்புணர்ச்சி மற்றும் சுயநல நோக்கங்களுக்காக பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.







