சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது பிரதான வீதிப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனையின்போது, ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த ஆட்டிறைச்சி உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழும் இல்லாதமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த ஆட்டிறைச்சி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவத்தைத் தவறாக சித்தரித்து, நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான வதந்திகளை நம்பவோ அல்லது சமூக ஊடகங்களில் பகிரவோ வேண்டாம் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







