ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (01) மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையமான CENTCOM தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) மேற்கொண்டதாகக் கூறப்படும் அண்மைய தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக CENTCOM குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர் சிதறிய பாகங்கள் விழுந்ததில், சிறு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் அரசு ஊடகங்களும் ஜோர்டானிய ஆயுதப் படைகளும் தெரிவித்துள்ளன. குவைத் மற்றும் பஹ்ரைனிலும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோர்டான் ஆயுதப் படைகளின் தகவலின்படி, 13 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 10 அழிக்கப்பட்டுள்ளன. ஏனைய மூன்று ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாகவும், இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதன்கிழமை (02) அதிகாலை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனிலும் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்பில் அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், ஈரான் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு மேலும் கடுமையான மற்றும் உயர் மட்டத்தில் பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.
கடந்த ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் தாக்குதல்களாக இவை அமைந்துள்ளன. முன்னதாக லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ராக்கெட் ஏவுதளங்களை அமெரிக்கப் படைகள் இலக்காகக் கொண்டிருந்தன.
இதற்குப் பதிலடியாக தெஹ்ரான், ஜோர்டானிலுள்ள விமானத் தளங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஆளில்லா விமானம் மூலம் இலக்கு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது விரிவான தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் மோதல் தீவிரமடைந்தது. இதற்கு பதிலளித்த ஈரான், இஸ்ரேல், அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தியதுடன், ஹார்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்தையும் பெருமளவில் பாதித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நீடிக்கும் நோக்கில் ஜூன் மாதம் அமெரிக்கா–ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த போதிலும், அந்த ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து மீண்டும் பகைமை தீவிரமடைந்துள்ளது.
தற்போதைய மோதலில் இரு தரப்பினரும் கப்பல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா கடற்படை முற்றுகையையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தெஹ்ரானை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் நோக்கிலும், ஈரானின் பங்காளிகளுக்கு எதிரான இரண்டாம் நிலைத் தடைகளை விரிவுபடுத்தும் வகையிலும் புதிய தடைகள் நடவடிக்கைகளை அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







