மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த அனுமதிகளை கோரி அலுவலகத்திற்குச் சென்ற சுமனரத்ன தேரர், பணியக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த அதிகாரி ஒருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இதற்கு முன்னரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.







