பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கொல்ஹி, பீல் மற்றும் மேக்வார் போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஹிந்து சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகள் காணாமல் போவதாக சிறுபான்மை உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்நிலையில், சிந்து மாகாணத்தின் டாண்டோ அல்லாயார் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்ட பின்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சீதா மற்றும் ரூபி என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சிறுமிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தங்களை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீதிமன்றம் அவர்களை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதனையடுத்து, 14 வயதுடைய பன்சி கோலி என்ற மற்றுமொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில் ஆறு ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக சிறுபான்மை உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், இந்த ஆறு சம்பவங்கள் தொடர்பான எண்ணிக்கை மற்றும் அனைத்து சிறுமிகளும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறுமிகளை கடத்துதல், கட்டாய மதமாற்றம் மற்றும் சிறுவயது திருமணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.







