மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள EMS தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரமாண்ட திறப்பு விழா நேற்று (18) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
“Learn to Care and Serve” என்ற தொனிப்பொருளில், தொழிற்துறை கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் திறன்கள், அறிவு மற்றும் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு 190, புதிய கல்முனை வீதி, கல்லடி பகுதியில் அமைந்துள்ள இந்நிலையத்தின் தலைமை அதிகாரி கதிர்காமதம்பி விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாவட்ட செயலகப் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலன் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு, தொழிற்பயிற்சி நிலையத்தை உத்தியோகபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.
தொழிற்பயிற்சி கல்வியின் ஊடாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் புதிய திறன்களை வழங்கி, அவர்களின் எதிர்கால தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய தொழிற்பயிற்சி நிலையம் செயற்படவுள்ளதாக நிலையத்தின் தலைமை அதிகாரி கதிர்காமதம்பி விமலநாதன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் இயக்குனர் சபை உறுப்பினர்களான வைத்தியர் தி. சிவசீலன் மற்றும் நடேசமூர்த்தி, நிலையத்தின் அதிபர், தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட EMS நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பயிற்சி பெற வருகைதந்துள்ள மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“திறன்மிக்க மற்றும் வலுவான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற நோக்குடன் EMS தொழிற்பயிற்சி நிலையம் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.




















