மானிய உரமாக இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பல முக்கிய உர நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகிக்கும் 10 பேரை அடுத்த சில நாட்களில் கைது செய்ய குற்றப்புலனாய்வுத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய உர செயலக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்படவுள்ளவர்களில் பெண்களும் உள்ளதாக தெரியவருகிறது.
அவர்களில் ஐந்து பெரிய நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகிப்பவர்களும் அடங்குவதாக தெரிய வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மானிய உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் ஹொரணை, கேகாலை, மாதம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதான கைத்தொழில் துறை நிறுவனங்களுக்கு பல்வேறு மோசடி முறைகளில் அதிக விலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாக உர செயலகத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ரூபா 2500 பெறுமதியான யூரியா உர மூட்டையை இறக்குமதி செய்து அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் இரகசிய காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய உர செயலகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்ற 18 உர நிறுவனங்களினால் இந்த உரங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.