பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (29) அதிகாலை, பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்ப தகவல்களின்படி, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது T-56 ரக சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த அவர் உடனடியாக பாணத்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பேராதனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








