தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் படுகொலையின் பின்னணியில் பிரான்ஸிலுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான தொடர்ச்சியான கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் ராகம அலப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள பன்றி இறைச்சி கடை உரிமையாளர் ஒருவர் நேற்று முன்தினம் (21) காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில் டுபாயிலுள்ள பாதாள உலகக் குற்றவாளியான நிபுனா செயற்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வெல்லே சாரங்கா என்ற பாதாள உலகக் குழுவின் மைத்துனரே என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலை வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வர்த்தகர் பலத்த காயங்களுடன் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் ஜா-எல பகுதியை சேர்ந்த பிரபல வர்த்தகரான 42 வயதான சுனில் எனபொலிஸார் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட வர்த்தகர் தொடர்பில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் அல்லது ஏனைய குற்றங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் மோதரையில் உணவகம் ஒன்றின் முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.
இந்த பின்னணியுடன் பிரான்சிலுள்ள ரூபன் என்னும் பாதாள உலக குற்றவாளியும் தொடர்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.