2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், சேவை வழங்கலின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சேவைகளை மேலும் இலகுவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து போக்குவரத்து அபராதக் கட்டணங்களையும் ‘govPay’ ஊடாக மாத்திரம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
பொதுத்துறைக்கான தகவல் தொழில்நுட்பச் சேவைகளை நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சேவையாக உருவாக்குவதற்கு கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் அரச சேவைகளின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் திறமையான சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.








