மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (04.03.2024) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

நண்பர் ஒருவரின் பிறந்தநாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

