திருகோணமலை-அக்போபுர காவல்துறை பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதுடன், கணவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று(29) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை சத்தம் போடவேண்டாம் என அயலில் இருந்த கணவன் மற்றும் மனைவி கூறியுள்ளனர்.

அதையடுத்து, கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து, படுகாயம் அடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவர் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தில் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து என்ற 44 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியை சேர்ந்த சந்தேகநபரான ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற 54 வயதுடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.