புத்தாண்டு அழகிப் போட்டி நிகழ்வொன்றின் போது பாதுகாக்கப்பட்ட மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கும், அந்தப் பாம்பை அவருக்கு விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெல்லன்வில கொழும்பு மாவட்ட வனஜீவிகள் வலய அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில், வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் இளம்பெண்ணும், பணம் பெற்றுக்கொண்டு மலைப்பாம்பை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 22ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான மலைப்பாம்பை பயன்படுத்தி நடனமாடிய குற்றத்திற்காக இளம்பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பாதுகாக்கப்பட்ட விலங்கை சட்டவிரோதமாக வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய சந்தேகநபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை அனுமதியின்றி வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது என வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம் மீண்டும் எச்சரித்துள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








