இலங்கையில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் சுமார் 7,000 திடீர் மரணங்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலகளவில் ஆண்டுதோறும் 7 முதல் 8 மில்லியன் பேர் வரை வளி மாசடைவின் தாக்கத்தால் உயிரிழப்பதாகவும், அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இலங்கையிலும் காற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வளி மாசடைவு காரணமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நீடித்த நுரையீரல் நோய்கள் மட்டுமன்றி, மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வீட்டுக்குள் விறகை எரித்து சமைக்கும் போது வெளியேறும் புகையால் உட்புற வளி மாசடைவு வெளிப்புறத்தை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மூடிய இடங்களில் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்தி சமைப்பதைத் தவிர்க்குமாறும், சுகாதாரத்திற்கு பாதுகாப்பான சமையல் முறைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.








