டுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாட்டின் முன்னணி பாதாள உலகக் கும்பல் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் வியாபாரியாகவும் கருதப்படும் மன்னா ரமேஷ் மற்றும் அவரது சீடர்கள் மூவரும் இன்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்த நான்கு பாதாள உலக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நேற்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இரகசியப் பொலிஸாருக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நடவடிக்கையின் கீழ் விசேட இரகசிய பொலிஸ் குழு டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுத் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் பயணித்தபோது உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது சீடர்கள் மூவரையும் உள்ளூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்ட நாற்பத்து மூன்று பேர் பட்டியலில் மன்னா ரமேஷும் இருப்பதாக கூறப்படுகிறது.








