அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு மொத்தம் 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வெல்லவாய பகுதியில் 5 கிலோ எடையுள்ள பொதியொன்றை கிலோவொன்றுக்கு 350 ரூபா என்ற விலையில் விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த வர்த்தகருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு 150,000 ரூபா அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, வெல்லவாய யாலபோவ பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா GR 11 அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 240 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை கிலோவொன்றுக்கு 260 ரூபா என்ற அதிக விலையில் சில்லறையாக விற்பனை செய்தமை தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கிலும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு 150,000 ரூபா அபராதம் விதிக்க வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களிடமிருந்து மொத்தமாக 3 இலட்சம் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.







