அரச வங்கிகளில் சிறியளவிலான கடன்களைப் பெற்றுள்ள சாதாரண மக்கள் தவணைகளைச் செலுத்தத் தவறும்போது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று நீண்டகாலமாக அவற்றைச் செலுத்தாத பெரும் கடனாளிகளுக்கு எதிராக அரசு ஏன் அதே அளவிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், சாதாரண குடிமகன் அரச வங்கியொன்றில் சிறிய தொகையை கடனாகப் பெற்று தவணைகளை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால், ‘Parate Execution’ உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் மூலம் அவரது வீடு, வணிக நிலையம் மற்றும் வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் கூட பறிமுதல் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று நீண்டகாலமாக அவற்றைத் திருப்பிச் செலுத்தாத பெரும் கடனாளிகளிடமிருந்து மக்களின் பணத்தை மீட்டெடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பினார்.
அரச வங்கிகளின் நிதி என்பது அரசாங்கத்துக்குச் சொந்தமான பணம் மாத்திரமல்ல எனத் தெரிவித்த சாணக்கியன், அது பொதுமக்களின் சேமிப்புப் பணம் என்பதால், அதனைப் பாதுகாப்பதில் அரசு முழுமையான பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
சிறு கடனாளிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் நிலையில், பெரும் கடன் நிலுவைகளை வைத்திருக்கும் செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதே சட்டம் சமமாக அமுல்படுத்தப்படுகிறதா என்பதற்கு அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் அரச அடமான மற்றும் முதலீட்டு வங்கி ஆகிய அரச வங்கிகளில் தற்போது நிலுவையில் உள்ள 20 மிகப்பெரிய தவணைக் கடன் கணக்குகள் மற்றும் கடந்த 15 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட 20 மிகப்பெரிய கடன்கள் தொடர்பான முழுமையான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, ஒவ்வொரு கடன் கணக்குக்கும் தொடர்புடைய கடனாளி அல்லது நிறுவனத்தின் பெயர், நிலுவையில் உள்ள அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, கடன் வழங்கப்பட்ட ஆண்டு, அது வராக் கடனாக மாறிய அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட திகதி, வழங்கப்பட்ட பிணை மற்றும் அதன் மதிப்பு, கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதா, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா, இதுவரை மீட்கப்பட்ட தொகை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சட்ட, குற்றவியல் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், குறித்த பெரிய கடன் கணக்குகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள், இதுவரை மீட்கப்பட்ட தொகைகள் மற்றும் ஒவ்வொரு கணக்கினதும் தற்போதைய நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முழுமையான தகவல்களைத் திரட்டுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டால், குறைந்தபட்சம் பெரிய கடன் கணக்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மொத்த நிலுவைத் தொகையை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையையாவது சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
இவ்வாறான தகவல்களை வெளியிடுவது புதிதான கோரிக்கையல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களிலும் பாராளுமன்ற எழுத்துமூல வினாக்கள் மூலம் அரச வங்கிகளில் பெரும் கடன் நிலுவைகளை வைத்திருந்தவர்களின் பெயர்கள் மற்றும் நிலுவைத் தொகைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முழுமையாக அரசுக்குச் சொந்தமான வங்கிகளும் பொது அதிகாரசபைகளாகக் கருதப்படுவதால், இத்தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் சட்டரீதியான தடைகள் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அரச வங்கிகளில் இருந்து பெருமளவு கடன் பெற்று, அந்த நிதியை மீண்டும் வட்டிக்கு வழங்கி இலாபம் ஈட்டிய போதிலும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவத்தையும் அவர் நினைவூட்டினார்.
இத்தகைய முறைகேடுகளுக்கு சில அரச வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.
“சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும், அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவர்களுக்கு மற்றொரு சட்டமும்” என்ற நிலை இனியும் தொடரக் கூடாது எனத் தெரிவித்த அவர், அரச வங்கிகளில் இருந்து மக்களின் பணத்தைப் பெற்று பல ஆண்டுகளாக திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்தும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மக்களின் பணத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; அதனை உறுதி செய்வது பாராளுமன்றத்தின் பொறுப்பும் ஆகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.








