2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய மாதாந்த வருமானம் குறித்த சொத்துப் பிரகடனங்களின்படி, முன்னணி வேட்பாளர்களில் இலங்கையின் முன்னணித் தொழிலதிபர் திலித் ஜயவீர அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளராகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்த வருமானம் ஈட்டும் வேட்பாளர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்களது சொத்துப் பிரகடனங்களின்படி, சர்வஜன அதிகார கட்சியின் வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர 16, 500, 000 ரூபாவை மாதாந்த வருமானமாகப் பெற்று பட்டியலில் முன்னணியில் உள்ளார். ஜயவீர தெரண ஊடக வலையமைப்பு உட்பட பல நிறுவனங்களின் உரிமையாளராகவுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மாதாந்த சம்பளம் 1,345,000 ரூபாவாகும். முழுநேர அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான அவர் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
டிலித் ஜயவீர, விஜயதாச ராஜபக்சவைத் தவிர்த்து ஏனைய அனைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் மாதாந்த சம்பளமாக 500,000 ரூபாவிற்கும் குறைவாகவே மாதாந்த வருமானம் காட்டியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க சம்பளத்தை பெறுவோர்.

அவர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 454,285 ரூபா மாத வருமானத்தைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாதாந்த சம்பளமாக 317,785 ரூபாவும் , மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே 300,000 ரூபாவையும் காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 295,681 ரூபாவை மாதாந்த வருமானமாகக் குறிப்பிட்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 256,802 ரூபாவை மாதாந்தச் சம்பளமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சொத்துப் பிரகடனங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மிகக் குறைந்த மாத வருமானமாக 179,691 ரூபாவை மாதாந்த வருமானமாகக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் ஆவார்.
ஏனைய வேட்பாளர்களின் மாதாந்த வருமானங்கள் 400,000க்கும் குறைவானவையாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








