எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் காணாமல்ஆக்கப்பட்டத்திற்கும் நீதி நியாயமும் இல்லாத நிலையிலும் பொறுக்கூறல் இல்லாத நிலையிலும் எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கொண்டாட்ட தினமாக அல்லாமல் ஒரு துக்கதினமாக பிரகடனப்படுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் சுயநிர்ணயம். சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஏற்படுத்தி தர வேண்டும். அதுதான் தமிழர்களின் உண்மையான சுதந்திர தினமாக இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பெப்ரவரி நான்காம் திகதி. எமது நாட்டின் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன். சுதந்திரம் என்பது சொற்களாலோ சோடனை கடதாசிகளாலோ. சுதந்திர கீதத்தாலோ அலங்கரிக்கப்படுகின்ற ஒரு காட்சி பொருள் அல்ல. சுதந்திரம் என்பது எமது உணர்வு ரீதியாக. செயற்பாட்டு ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு விடயம். அந்த வகையில் பார்க்கின்ற போது. கடந்த காலத்தில் நாங்கள் சுதந்திரத்தை பெற்றிருந்தாலும் கூட. உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை.
கிட்டத்தட்ட 76 ஆண்டுகளாக அந்த சுதந்திரத்தை பேச்சளவில் பேசி கொள்கின்றோம். செயற்பாட்டளவில் அனுபவிக்கவில்லை. அந்த வகையில் சொல்லப்போனால் இன்றைய நிலையில் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 2009 க்கு பின்னர் நாங்கள் 16 ஆண்டுகள் கடந்து இருக்கின்றோம். ஆனால் உண்மையில் நாங்கள் சுதந்திரத்தை பெற்றிருக்கின்றோமா? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைத்து இருக்கின்றதா? உண்மையை கண்டறிந்து இருக்கிறோமா? அதேபோன்று இந்த இழக்கப்பட்ட உயிர்களுக்கான நீதி பரிகாரம் கிடைத்து இருக்கின்றதா? என்று பார்க்கும்போது உண்மையில் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது.
அரசிடம் நாங்கள் கேட்கின்றோம். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார், அதாவது படையில் உள்ளவர்கள் சில பகுதியினர் ஆயுதங்களைக் கொண்டு சில பாதாள லோக கோஷ்டி செயற்பாடுகளை செய்துவிட்டு அவர்கள் முகாம்களில் மறைந்து இருக்கின்றார்கள் என்ற கருத்தை அவர் குறிப்பிட்டு இருந்தார். அப்படி. பார்க்க போனால் கடந்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டதற்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்கும் அல்லது புதைக்கப்பட்டதற்கும் இப்படியான செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கின்றனவா?
எனவே இந்த சுதந்திர தினத்தை. ஒரு சுதந்திரமான ஆனந்தமான தினமாக கொண்டாட முடியாத நிலையில் ஏக்கத்தோடும் துயரத்தோடும் நாங்கள் இருக்கின்றோம்.
எதிர்வரும் சுதந்திர தினத்தினை நாங்கள் ஒரு கொண்டாட்ட தினம் அல்லாமல் ஒரு திண்டாட்ட தினமாக ஒரு துக்க தினமாக பிரகடனபடுத்தவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையில் காணப்படுகின்றோம்.
சுதந்திரத்திற்காக ஏங்கியவர்கள் சுதந்திரம் இல்லாமலே கண்களை மூடி இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஒரு சுதந்திரமான தினத்தை புதிய ஆட்சியாளர்கள் சிவப்பு கட்சியினர் இடது சாரியினர் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்களும் எங்களை ஏமாற்றுபவராக இருந்ததால், தொடர்ந்தும் இந்த சுதந்திர தினத்தினை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணிகள் பறி கொடுத்தவர்கள் அதேபோன்று தமது மேய்ச்சல் தரையினை இழந்தவர்கள் பல்வேறு ஒடுக்கு முறைக்கு உட்பட்ட இந்த தமிழ் இனம் அன்றைய நாளில் ஒரு துக்க தினமாக மட்டக்களப்பு மக்கள் அனுஷ்டிப்பார்கள் என இந்த இடத்தில் நாங்கள் கூறிக் கொள்கின்றோம்.
ஒரு பொழுதுபோக்காக இதனை செய்யவில்லை. எங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு துன்பியல் தினமாக அதனை பிரகடனப்படுத்தி இருக்கின்றோம் என்பதனை இந்த இடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.