ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப் பெரிய பிழையாகும் என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போராட்டம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் நடந்து வருகின்றது. நானும் அதில் இணைந்துகொண்டுள்ளேன்.
இதுவரைக்கும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னர் எமக்கான ஒரு சாதகமான சமிக்ஞை கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம் – கிடைக்கவில்லை.
இம்முறை ஜனாதிபதி அபிவிருத்தி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வரும்போது ஏதாவது சாதகமான சமிக்ஞை வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம்.
இது குறித்து நாங்கள் பல தரப்புடனும் பேசியிருந்தோம்.
ஆளுநரிடம் முறையிட்டிருந்தோம், ஆளுநர் எங்களை சந்தித்து பேசியவேளை சாதகமான விதத்திலேயே பதில் சொல்லியிருந்தார். தீர்க்கப்படவேண்டிய விடயம் என தெரிவித்திருந்தார்.
போனமுறை கூட்டத்தில் கூட திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்களின் பிரதிநிதியாக எங்களின் பிரச்சினையை அந்த இடத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
அதேபோல சந்திரசேகரன் கூட இது தவறான கட்டிடம் அகற்றப்படவேண்டும் என தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் இந்தமுறை கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை ஜனாதிபதியை நோக்கி மிகவும் தாழ்மையான முறையில் முன்வைத்தார்.
அதனை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாகவே நாங்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தோம். அந்த சந்திப்பில் பிரதேச செயலர் -ஆளுநர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டிய மிக முக்கியமான நபரான ஜனாதிபதியிருந்தார், எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவதளபதிகள் என அனைவரும் அங்கு கூடியிருந்தனர்
அந்த இடத்தில் ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமலோ ஒரு தீர்வை அல்லது பதிலைமுன்வைக்கவேண்டிய இக்கட்டான நிலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது,அதில் திடீரென குறுக்கே புகுந்த இராமநாதன் அர்ச்சுனா,இந்த பிரச்சினையை நஷ்டஈடு வழங்கி தீர்த்துக்கொள்ளலாம் ,இவர்களின் அரசியல் செல்லுபடியாகாது என தெரிவித்தமையானது,மிகுந்த மனவேதனையை தருகின்றது.
மக்களின் பிரதிநிதியாகிய நீங்கள் மக்களின் பிரச்சினையை ஒரு பொதுவெளியில் கதைக்கின்றீர்கள் என்றால்,பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பாடியிருக்கவேண்டும், கதைத்திருக்கவேண்டும்.
எம்முடன் அவர் எந்த வித தொடர்பையும் பேணவில்லை , பாதிக்கப்பட்ட மக்களுடன் எந்த தொடர்பையும் பேணவில்லை, அவர்களை தொடர்புகொள்ளவில்லை, மேலும் ஜனாதிபதி கருத்துகூறமுற்பட்டவேளை அதில் குறுக்கிட்டு திட்டடமிட்டு திசைதிருப்பியாகவே நான் கருதுகின்றேன்.
அந்த இடத்தில் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதும் மிகுந்த விரக்தி ஏற்படுகின்றது ஏனென்றால் நாங்கள் தனித்தனியாக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கின்றோம் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கின்றோம் இராணுவ அதிகாரிகளையும் சந்தித்திருக்கின்றோம்.
அனைவரும் எங்களை தனித்தனியாக சந்திக்கும்போது இது உங்களிற்கு நடந்த மிகப்பெரிய அநீதி என தெரிவித்தார்கள்,பௌத்த மதகுருமார்களையும் சந்தித்திருக்கின்றோம் அவர்களும் இது உங்களிற்கு நடந்த மிகப்பெரிய அநீதி என தெரிவித்துள்ளார்கள்.பௌத்த மதத்தை முறையாக பின்பற்றும் எவரும் இந்த அநீதியை முன்னெடுக்க முடியாது, இது தீர்க்கப்படவேண்டிய விடயம் ,நாங்கள் ஜனாதிபதியிடம் இது குறித்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என தனித்தனியாக தெரிவித்திருந்தார்கள்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட இது தீர்க்கப்படவேண்டிய விடயமே எனகூறியவர்கள்,ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்.
அர்ச்சுனா இராமநாதன் குறுக்கிட்டபோது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களிற்கான தீர்வு அவசியம் என்ற விடயத்தை ஒருமித்த குரலாக முன்வைத்திருந்தால், ஜனாதிபதியின் வாயிலிருந்து உறுதிமொழியோ அல்லது தீர்வுதிட்டமோ வெளியாகியிருக்கும் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கலாம்.
ஆளுநரும் ஜனாதிபதிக்கு சந்தர்ப்பமொன்றை கொடுத்திருக்கலாம், இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப்போகின்றீர்கள் என்ற கேள்வியை தானும் எழுப்பியிருக்கலாம்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் சார்பாக தான் வாதிடவேண்டும், மக்களின் உண்மை பிரச்சினையை எழுப்பியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அரசபக்கம் நின்று செயலாற்றுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது.
அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப்பெரிய பிழையாகும்.
இந்த விடயத்தை நீங்கள் ஒரு கட்சி பிரச்சினையாக பார்க்ககூடாது. அரசியல்வாதியென்பவர் மக்களிற்கானவர்.மக்களுக்காக அரசியல்வாதியொருவர் அந்த இடத்தில் வந்து நிற்க்கும்போது அதனை அரசியல் என தெரிவிப்பதை நான் எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.