அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி எரங்க குணசேகர அறிவித்தார்.
இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் வருடாந்தம் அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பை நம்பியே இருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அரசால் வேலை வாய்ப்பை வழங்க முடியாதுள்ளது என்பதே உண்மையாகும்.
அண்மையில் கூட யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிடம் வேலை வாய்ப்பை வழங்க கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அரச துறையை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என வேலையற்ற பட்டதாரிகளுக்கு, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அண்மையில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.